Tamilnadu
முரசொலி நிலம் குறித்து அவதூறாகப் பேசிய டாக்டர்.ராமதாஸ், பா.ஜ.க சீனிவாசனுக்கு தி.மு.க நோட்டீஸ்!
முரசொலி நில விவகாரம் தொடர்பாக தாங்கள் தெரிவித்த கருத்துகளுக்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க சீனிவாசன் ஆகியோர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என முரசொலி சார்பில் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளும் குற்றம்சாட்டின. இந்த சர்ச்சை குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் தகுந்த பதிலடிகளைக் கொடுத்து, ஆதாரம் சமர்ப்பிக்கத் தயாரா என எதிர்க்கட்சியினருக்கு சவால் விடுத்தனர்.
பின்னர், பா.ஜ.க மாநில செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் முரசொலி நிலம் குறித்துப் புகார் அளித்தார். பா.ஜ.க பிரமுகர் அளித்த புகாரின் பேரில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், முரசொலி அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியது. விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தி.மு.க அமைப்பு செயலாளரும், முரசொலி அறக்கட்டளை அறங்காவலருமான ஆர்.எஸ்.பாரதி ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால், புகார் அளித்த பா.ஜ.க சீனிவாசனும், தலைமைச் செயலாளரும் வாய்தா வாங்கினர். பொய்ப் புகார் அளித்தவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார் ஆர்.எஸ்.பாரதி.
இந்நிலையில் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.கவின் சீனிவாசன் ஆகியோருக்கு, முரசொலி அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், முரசொலி நிலம் தொடர்பாக தெரிவித்த கருத்துகளுக்கு 48 மணிநேரத்துக்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் ரூபாய் 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
+2 தேர்வு : எந்தெந்த மாவட்டங்கள் எத்தனை சதவீதம் தேர்ச்சி? - புள்ளி விவரங்களோடு பட்டியல் வெளியீடு !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு : தேர்ச்சி பெற்ற டாப் 3 மாவட்டங்கள் - பட்டியல் இதோ !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - இந்த முறையும் மாணவிகளே சாதனை !
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !