Tamilnadu

பொய் வழக்கு போட்ட போலிஸார்... ஃபேஸ்புக் LIVE போட்டு தற்கொலைக்கு முயற்சித்த இளைஞரால் கரூர் அருகே பரபரப்பு!

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சதானந்தம் (23). பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பெயிண்ட் அடிப்பது, மாட்டு வண்டியில் மணல் அள்ளி விற்பனை செய்வது போன்ற வேலைகள் செய்து வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக பசுபதிபாளையம் போலிஸார் சதானந்தம் மீது பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைப்பதாகவும், தண்டனைக் காலம் முடிந்தபிறகு சதானந்தம் வேலைக்குச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மாயமாகியிருந்த சதானந்ததை அவரது குடும்பத்தினர் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் சணப்பிரட்டி கிராமம் அமராவதி ஆற்றங்கரையில் அமர்ந்துகொண்டு குளிர்பானத்தில் எறும்பு மருந்தை கலந்து குடித்தார் சதானந்தம்.

அப்போது தன் நிலையை வீடியோவாக பதிவு செய்து ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பினார். அந்த வீடியோவில், தனது சாவிற்கு காரணம் பசுபதிபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் எனவும், தன்மீது பொய்யான திருட்டு வழக்கு பதிவு செய்து போலிஸார் சிறையில் அடைக்க உள்ளதாகவும், அதனால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் பேசியுள்ளாா்.

இதனைப் பார்த்த அந்தப்பகுதியில் இருந்த பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் இளைஞரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்போது இளைஞர் சதானந்தம் அபாய கட்டத்தை தாண்டி நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பசுபதிபாளையம் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.