Tamilnadu

“டாஸ்மாக்குக்கு தரும் முக்கியத்துவம் கூட விவசாயிகளுக்கு கொடுப்பதில்லை” - இரா.முத்தரசன் குற்றச்சாட்டு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருநெல்வேலியில், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ''உள்ளாட்சித் தேர்தலை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருக்கும்போது சூசகமாக பல வேலைகளை ஆளும் கட்சி செய்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தலை இதுவரை இல்லாத விதத்தில் மூன்று கட்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

உள்ளாட்சித் தேர்தலிலும் சதி செய்து வெற்றி பெறும் நோக்கில் ஆளும் கட்சி செயல்படுகிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளது. கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டாகியும் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகள் சீர் செய்யப்படவில்லை. அரசின் உதவித்தொகை கூட கஜா புயலால் பாதித்த மக்களுக்கு கிடைக்கவில்லை.

தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை அரசு சேமித்து வைத்து விவசாயிகளுக்கு வழங்கவேண்டும். அரசு டாஸ்மாக் மதுபானத்தில் காட்டும் அக்கறையை விவசாயிகளின் தேவைகள் மீது காட்டவில்லை. தட்டுப்பாடுகளின்றி யூரியா கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஐ.ஐ.டி மாணவி உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். தீப்பெட்டி, பீடி தொழில் மீது உள்ள ஜி.எஸ்.டி வரியால் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஜி.எஸ்.டி வரியைக் குறைக்கவேண்டும்.

Also Read: “சென்னை ஐஐடி வளாகம் ஒரு உயரடுக்கு சாதியவாத, இனவாதம் பேசும் வன்முறைக்கூடம்”- IIT மாணவியின் பேஸ்புக் பதிவு!

பாதாள சாக்கடைகளில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்படவேண்டும்.பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய இயந்திரங்களை பயன்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுடனான கூட்டணி தொடரும். உள்ளாட்சித் தேர்தலை தாண்டியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குத்தான் இருக்கும்'' எனத் தெரிவித்தார்.