Tamilnadu

“IIT: விசாரணைக் குழு அமைத்து மாணவர்களின் பிரச்னைகளை நிவர்த்தி செய்யவேண்டும்”- தி.மு.க மாணவரணி போராட்டம்!

ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலைக்கு காரணமான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க மாணவரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலை தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் தொடர்ந்து இதுபோன்று மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் நடைபெற்றுவரும் தற்கொலைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் எனவும் தி.மு.க மாணவர் அணி சார்பாக ஐ.ஐ.டி வளாகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க மாணவர் அணி மாநில துணை செயலாளர் வீ.கவி கணேசன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை ஐ.ஐ.டி-யில் தொடர்ந்து வரும் மாணவர்களின் மரணத்தை உடனே தடுக்கவேண்டும், மாணவி ஃபாத்திமா மரணத்திற்கு காரணமான பேராசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும், விசாரணைக் குழுவை அமைத்து மாணவ-மாணவிகளின் பிரச்னையை கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும்.

மாணவியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தி.மு.க மாணவரணியினர் முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சென்னை ஐ.ஐ.டி மட்டுமல்லாது இந்தியா முழுவதும் செயல்பட்டுவரும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து சாதி மத ரீதியான பாகுபாடுகள் அதிக அளவில் மாணவர்களிடம் புகுத்தப்படுவதாகவும், அதற்கு முடிவுகட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.