Tamilnadu

தண்டவாளத்தில் மிதமிஞ்சிய மதுபோதை.,  ரயில் மோதி 4 மாணவர்கள் பலி: ஒருவருக்கு தீவிர சிகிச்சை!

கோவை அருகே சூலூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்துவரும் மாணவர்கள் 5 பேர் நேற்றிரவு ராவுத்தர்பாளையம் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.

அப்போது, கேரள மாநிலம் ஆலப்புழாவில் இருந்து கோவை வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த தண்டவாளத்தில் வந்துள்ளது. ராவுத்தர்பாளையம் வரும் பொழுது தூரத்தில் மனிதர்கள் இருப்பதை உணர்ந்த இன்ஜின் டிரைவர் ஹாரன் அடித்துள்ளார்.

ஆனால், மதுபோதையில் சுயநினைவை இழந்ததால், மாணவர்கள் விலகிச் செல்லவில்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் 5 பேர் மீதும் மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒருவருக்கு மட்டும் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து ரயில்வே போலிஸாருக்கு இன்ஜின் டிரைவர் தகவல் கொடுத்துள்ளார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலிஸார் மாணவர்கள் 4 பேரின் உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயத்துடன் இருந்த மாணவரையும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த மாணவர்கள்

பின்னர் இதுகுறித்து போலிஸார் நடத்திய விசாரணையில், திண்டுக்கலைச் சேர்ந்த சித்திக் ராஜா, ராஜசேகர், ராஜபாளையத்தை சேர்ந்த கருப்புசாமி, கவுதம் என்றும் மற்றும் காயம் அடைந்தது தேனியை சேர்ந்த விஷ்வனேஷ் என்பதும் தெரியவந்தது. இதில், கருப்புசாமி, கவுதம் ஆகியோர் பி.இ படித்து முடித்து விட்டு அரியர் தேர்வு எழுத வந்துள்ளனர்.

இதனையடுத்து பலியான மாணவர்கள் பற்றி அவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டு 4 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இளம் வயதில் மதுபோதையில் மரணத்தை தேடிகொண்டன மாணவர்களால் அவர்கள் பெற்றோர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.