Tamilnadu

“இந்து முன்னணி நிர்வாகியிடமே முன்பணம் கேக்குறீயா?” - உடற்பயிற்சியாளர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல்!

திருப்பூர் மாவட்டம் கடைவீதி பகுதியில் உள்ள அம்மன் நகரில் ஜெயமுருகன் என்பவர் ‘கவின் ஃபிட்னஸ்’ என்ற பெயரில் உடற்பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது உடற்பயிற்சி மையத்தில் கேத்தன்பாளையத்தைச் சேர்ந்த வெஸ்லி டேனியல் என்ற இளைஞர் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்றையதினம் டேனியல் உடற்பயிற்சி மையத்தில் தனது பணியை மேற்கொண்டு இருக்கும்போது, அதேபகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் உடற்பயிற்சி மையத்தில் சேரவந்துள்ளார். அப்போது டேனியல் பயிற்சி மையத்தில் சேருவதற்கு முன்பணம் செலுத்தவேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஆனால் சந்தோஷ் தான் இந்து முன்னணியைச் சேர்ந்தவர் என்றும், தன்னால் முன்பணம் தரமுடியாது என்றும் கூறியுள்ளார். இதனால் டேனியலுக்கும் சந்தோஷுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சந்தோஷ், இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த கார்த்தி, தமிழ், குட்டி விஷ்வா, அருண், ஆறுச்சாமி ஆகிய 6 பேரை அழைத்து வந்து உடற்பயிற்சி மையத்தில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தட்டிக்கேட்ட டேனியல் மீது 6 பேரும் கடுமையாக தாக்கதல் நடத்தியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த டேனியல் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த உடற்பயிற்சி மையத்தின் உரிமையாளர் ஜெயமுருகன் பொதுமக்கள் உதவியுடன் சந்தோஷ் மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைந்தார்.

மேலும் ஜெயமுருகன் கொடுத்த புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்தவர் இல்லை என அதன் மாநில நிர்வாகி பின்வாங்கியுள்ளார். முன்பணம் கேட்டவர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், திருப்பூரில் அதிகமான நன்கொடை கொடுக்க மறுத்தவர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.