Tamilnadu

“இன்ஸ்பெக்டர் சார்... போகாதீங்க”- காசிமேட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

குடிநீருக்காகவும், மதுபான கடைகளை மூடுவதற்காகவும் வீதியில் வந்து பெண்கள் மறியல் போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். அதேபோல, போராடும் பெண்களை ஆட்சியாளர்களின் உத்தரவுக்கு ஏற்ப விரட்டியடிப்பதையும் காவல்துறை வழக்கமாக கொண்டுள்ளது.

ஆனால் சென்னை வடசென்னையின் காசிமேடு பகுதியில் நூதனமான மறியல் போராட்டத்தினை நடத்தினர் அப்பகுதி பெண்கள். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் கோரிக்கை என்னவென்று தெரியுமா?

காசிமேட்டில் உள்ள காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளராக இருப்பவர் சிதம்பர முருகேசன். இவர் அப்பகுதி மக்களின் பாதுகாப்புக்கு எப்போது முக்கியத்துவம் அளிப்பவர். அதிகாலை சமயங்களில் மீன் வியாபாரத்துக்குச் செல்லும் பெண்களாக இருந்தாலும், ஆண்களாக இருந்தாலும் அனைவருக்கும் ஒரு சேர தனது பாதுகாப்பை அளித்து வந்துள்ளார் சிதம்பர முருகேசன்.

இதனால் காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசனுக்கான ஆதரவு எள்ளளவும் குறையாமல் அவர் மீதான மரியாதை நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அதிகரித்தே வந்துள்ளது. இந்த நிலையில், அம்பத்தூரில் உள்ள காவல் நிலையத்துக்கு காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனை அறிந்து அப்பகுதி பெண்கள் அதிர்ச்சி அடைந்தது மட்டுமல்லாமல் சாலை மறியலில் ஈடுபட்டு தங்கள் பகுதியை விட்டுச் செல்லவேண்டாம் எனவும் மன்றாடி சிதம்பர முருகேசனிடம் கேட்டுள்ளனர். சில பெண்மணிகள் அவரது கால்களில் விழுந்து கண்ணீர் மல்க கேட்டுள்ளனர்.

பொதுவெளியிலும், திரைப்படங்களிலும் வட சென்னை என்றதுமே அனைவரின் நினைவுக்கும் வருவதும் ரவுடித்தனமும், அராஜக குணமும் தான்.

ஆனால் அவற்றையெல்லாம் தூக்கியெறியும் அளவுக்கு ஒரு காவல் ஆய்வாளரின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் வீதிக்கு வந்து போராடும் அளவுக்கு அன்பாலும், பாசத்தாலும், பரிவாலும் உயர்ந்தவர்கள் வடசென்னை மக்கள் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துள்ளது.