Tamilnadu

குடும்ப பிரச்சனை காரணமாக அண்ணனை கழுத்தறுத்து கொன்ற 2 தம்பிகள் கைது...!

சென்னை திருவல்லிக்கேணி, அயோத்தியா நகர், 29 வது பிளாக்கில் வசிப்பவர் சக்திவேல்(48). இவருடைய இளைய சகோதரர்கள் ஞானவேல் மற்றும் கந்தவேல். சக்திவேல் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். இவர்கள் மூன்றுபேருக்கும் சொந்தமான 2 வீடுகளை பிரித்து கொடுப்பதில் கடந்த 2 ஆண்டுகளாக பிரச்னை இருந்துள்ளது.

இதில் ஒரு வீட்டில் திருமணமாகாத சக்திவேலும், மற்றொரு வீட்டில் ஞானவேல் மற்றும் கந்தவேல் ஆகிய இருவரும் குடும்பத்தினருடனும் வசித்து வந்துள்ளனர். இதனிடையில் சக்திவேல் குடிபோதையில் அடிக்கடி தனது சகோதரர்கள் இல்லத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார் என தெரியவருகிறது.

கொலை செய்யப்பட்ட சக்திவேல்

இந்த நிலையில் சக்திவேல், ஞானவேல் மற்றும் கந்தவேல் இருவரும் தங்கியுள்ள வீட்டிற்கு சென்று தகராறு செய்துவிட்டு தனது இல்லத்தில் வந்து தூங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஞானவேல் மற்றும் கந்தவேல் ஆகிய இருவரும் சுமார் 8 மணியளவில் குடிபோதையில் இருந்த சக்திவேலை ஆக்ஸா பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, வி.ஆர்.பிள்ளை தெரு வழியாக தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் சக்திவேலை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக சக்திவேல் உயிரிழந்தார்.

பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மெரினா போலிஸார் , பிரேத பரிசோதனைக்காக சக்திவேலின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஞானவேல் மற்றும் கந்தவேல் ஆகிய இருவரின் புகைப்படம்

மேலும் சக்திவேலை கொலை செய்துவிட்டு தப்பி சென்ற ஞானவேல் மற்றும் கந்தவேலை ஐஸ் அவுஸ் போலிஸார் லாயிட்ஸ் சாலை சந்திப்பில் உள்ள வெங்கட் ரங்கம் பிள்ளை தெருவில் வைத்து இருவரையும் மடக்கி கைது செய்து மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

மெரினா காவல் நிலையத்தில் சகோதரர்கள் இருவரிடமும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சனை காரணமாக அண்ணனை சொந்த தம்பிகளே கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.