Tamilnadu

அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பு; 144 தடை - 8 தற்காலிக சிறைகள்: பதற்றத்தை ஏற்படுத்துகிறதா மோடி அரசு?

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை சங்பரிவாரக் கும்பல் இடித்து தகர்த்தது. இந்த இடம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. இதனால் உத்தரப்பிரதேசத்தின் பல நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில், சா்ச்சைக்குரிய நிலத்துக்கு உரிமை கோரும் வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் நாள் தோறும் விசாரித்து வந்தது.

அன்மையில் நிலத்துக்கு உரிமை கோரும் வழக்கு நிறைவடைந்தது. இந்நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். மேலும், தீர்ப்பு இம்மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தீர்ப்பு வரவுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை தீவிரமாக கண்காணிக்குமாறும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும்படியும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி அயோத்தியில் பாதுகாப்புக்காக 4 ஆயிரம் மத்திய போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர். அயோத்தியில் ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அதனால், 4 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு நவம்பர் 10-ம் தேதி வரை இருக்கும் என அறிவுறுத்தப்பட்டது. பின்னர் 144 தடை காலத்தை பா.ஜ.க அரசு நீடித்துள்ளது. அரசியல் கூட்டங்களுக்கும் இங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 தற்காலிக சிறையும் தயார் நிலையில் வைத்துதாகவும் கூறுகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.