Tamilnadu

ராபர்ட் பயாஸின் பரோல் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது? - சிறைத்துறை தகவல்!

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் ஒருவரான ராபர்ட் பயாஸ், தன் மகன் தமிழ்கோ-வின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய 30 நாட்கள் பரோல் வழங்கக் கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

சிறைத்துறை டி.ஐ.ஜி-க்கு அளித்த மனு மீது 40 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பரோல் கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காராமன் அமர்வு, சிறைத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி, பரோல் கோரிய விண்ணப்பத்தில், தங்கவிருக்கும் முகவரியை தெரிவிக்காததால் அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை என்றும் தற்போது முகவரி குறிப்பிட்டு ராபர்ட் பயாஸ் அளித்துள்ள புதிய பரோல் விண்ணப்பம் சிறைத்துறையின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.