Tamilnadu

தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு : சமூக விரோதிகள் யார் ? - போலிஸார் தீவிர விசாரணை!

தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதியில் உள்ள பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை ஒன்று உள்ளது. இந்தச் சிலையை பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற நிர்வாகம் பராமரித்து வருகின்றது. இந்நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் அந்தப் பகுதிக்கு வந்த சில சமூகவிரோதிகள், திருவள்ளுவர் திருவுருவச் சிலை மீது சாணத்தையும், கருப்பு மையமும் பூசிவிட்டுச் சென்றுள்ளனர்.

திருவள்ளுவர் சிலையை அவமதிக்கும் வகையில் நடந்த சமூக விரோதிகளின் இந்தச்செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அங்கு கூடிய தமிழ் ஆர்வலர்கள், தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வல்லம் போலிஸார் அந்த இடத்தில் சோதனை மேற்கொண்டனர். மேலும் சிலையை சேதப்படுத்தி சமூகவிரோத செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, தமிழக பா.ஜ.க-வினர் அவர்கள் வெளியிட்ட திருவள்ளுவர் புகைப்படத்தில் திருவள்ளுவருக்கு காவி வண்ணம் பூசி, திருவள்ளுவரை அவமதிக்கும் வகையில் நடந்துக்கொண்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.