Tamilnadu
பொள்ளாச்சி பாலியல் வழக்கு : சிபிஐ தரப்பு அறிக்கை தர மறுப்பு!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான உண்மையைக் கண்டறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை உள்ளிட்ட உதவிகள் வழங்க அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் புகார் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு தமிழ்நாடு பெண் வழக்கறிஞர் சங்கம் உள்ளிட்ட 10 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் இறுதி அறிக்கையை தங்களுக்கு வழங்கவேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் சரவணன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரகசிய விசாரணையாக நடத்த இருப்பதால் இறுதி அறிக்கையை அம்பலப்படுத்தும் வகையில் மனுதாரர்களுக்கு வழங்கமுடியாது என சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், இந்த வழக்கின் விசாரணையை நீதிமன்றம் மேற்பார்வையிடுவதற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை எனத் தெரிவித்த அவர், விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மனுதாரர்கள் வழக்கின் விசாரணைக்கு உதவ, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தையே அணுக வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை, கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் தொடர்ந்து சிறையிலேயே அடைக்கப்பட்டிருப்பார்கள் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பான வழக்கின் விசாரணைக்கு உதவும் வகையில், தங்களிடம் உள்ள ஆதாரங்களை சிபிஐ புலன் விசாரணை அதிகாரியிடம் வழங்க மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ க்கு உத்தரவிட்டனர். பின்னர், வழக்கின் விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
Also Read
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!