Tamilnadu

மாஞ்சா விற்பனை செய்தால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது - சென்னை காவல்துறை எச்சரிக்கை!

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் நேற்று மாலை மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கி படுகாயம் ஏற்பட்டதில் 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக 15 வயது சிறுவன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டதோடு பலரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக பேட்டியளித்த சென்னை வடக்கு கூடுதல் ஆணையர் தினகரன், மாஞ்சா நூல் பயன்படுத்துவது சென்னையில் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் 3 வயது சிறுவன் மாஞ்சா நூல் சிக்கியதில் உயிரிழந்துள்ள சம்பவம் வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

மேலும், மாஞ்சா நூல் விற்பனை குறித்து விசாரிக்க சென்னை முழுவதும் தனிப்படையினர் 15 குழுக்களாக அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் மாஞ்சா நூல் விற்பனை செய்பவர்கள் மற்றும் மஞ்சா நூல் பயன்படுத்தி பந்தயம் விடுபவர்கள் மீது குண்டர் சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் பாய்வதோடு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மாஞ்சா நூல் விடும் சிறுவர்களுக்கு இளைஞர்களுக்கும் அவர்களது பெற்றோர் அறிவுரை கூறி தடுக்க வேண்டும் எனவும் இதன்மூலம் உயிர் சேதங்களை தவிர்க்க முடியும் எனவும் அவர் கூறினார்.