Tamilnadu

“காங்கிரஸ் கொண்டுவந்த நீட் தேர்வை மட்டும் ஏன் மத்திய அரசு திரும்பப் பெறவில்லை?” - சென்னை ஐகோர்ட் கேள்வி!

நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவுகளை சிபிசிஐடியிடம் வழங்க நீதிபதி கிருபாகரன் அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீட் பயிற்சி மையங்கள் குறித்து தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், அரசு மருத்துவ கல்லூரியில் இந்தாண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள 3,081 மாணவர்களில் 48 பேர் மட்டும் நீட் பயிற்சி மையத்தில் பயிலாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல, நீட் பயிற்சி மையங்கள் 2 முதல் 5 லட்சம் வரை கட்டணம் வசூலிப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தனியார் நீட் பயிற்சி மையங்கள் 5 லட்சம் வரை கட்டணம் வசூலித்தால் ஏழை மாணவர்களால் எவ்வாறு நீட் பயிற்சி பெற முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.

மேலும், ஏழை மாணவர்களுக்காக மருத்துவ கல்லூரிகளின் கதவுகள் திறக்கப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள் மருத்துவப் படிப்பு அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் சமமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

பல லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவப் படிப்பு சேரும் முறையை மாற்ற நீட் தேர்வு கொண்டு வந்ததாக மத்திய அரசு கூறும் நிலையில், நீட் தேர்வு பயிற்சிக்காக அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மேலும், 24 மணி நேரமும் பணியில் இருக்கும் அரசு மருத்துவர்களுக்கு 57 ஆயிரம் ரூபாய் தான் ஊதியம் வழங்குவதாகவும் இது அரசு பள்ளி ஆசிரியர்களை விட மிகக் குறைவானது எனவும் தெரிவித்த நீதிபதிகள் புனிதமான பணியை செய்து வரும் மருத்துவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாகவும் தெரவித்தனர்.

மேலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திரும்ப பெற்று வரும் மத்திய அரசு நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகம் மாணவர்களின் கைரேகைகள் இன்று சி.பி.சி.ஐ.டி.யிடம் ஒப்படைக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, தேசிய தேர்வு முகமை வழங்கிய கைரேகைகளை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் தங்களிடம் உள்ள கைரேகைகளுடன் ஒப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்ய எத்தனை நாட்கள் ஆகும் என்று கேள்வியெழுப்பி, நீட் ஆள் மாறாட்டம் குறித்து ஏதேனும் புகார் பெறப்பட்டுள்ளதா என சி.பி.ஐ பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.