Tamilnadu

அரசியல் ஆதாயத்திற்காகவே பஞ்சமி நிலம் பற்றி பேசுகிறார் ராமதாஸ் - திருமாவளவன் எம்.பி

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை நியமிக்காததால் நகராட்சி, ஊராட்சிகளில் மக்கள் நலப்பணிகள் அனைத்தும் தேக்கமடைந்து கிடக்கின்றன.

இதோ, அதோ என உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதாக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால் நிச்சயம் தங்களால் வெற்றிபெற முடியாது எனத் தெரிந்தே அ.தி.மு.க அரசு காலம் தாழ்த்தி வருகிறது என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், இந்த முறையாவது உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்,” உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இத்தனை நாட்களாக தள்ளிப்போட்டதே சட்டவிரோதமான செயல். வருகிற டிசம்பர் மாதம் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தது போல அதனை நடத்தவேண்டும்.” என அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்தது போல பஞ்சமி நில ஆணையத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், பஞ்சமி நிலம் குறித்து இதுவரை பேசாத ராமதாஸ், எச்.ராஜா போன்றவர்கள் தற்போது அரசியல் ஆதாயத்திற்காக பேசி வருகின்றனர்” என குற்றஞ்சாட்டினார்.