Tamilnadu

முதல்வர் வீட்டின் அருகில் மலைபோல குப்பைகள்., அப்போ மற்ற இடங்கள்? - நீதிபதிகள் வருத்தம்!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவை எடுத்துக்கொண்ட நீதிமன்றம், நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, குப்பைகள் அகற்றப்படாததால் தான் டெங்கு நோய் பரவுவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், முதல்வர் வீட்டுக்கு அருகில் மலைபோல குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும், முதல்வர் வீட்டு அருகில் இந்த நிலை என்றால், மற்ற இடங்கள் எப்படி இருக்கும் என கற்பனை செய்ய முடியும் எனத் தெரிவித்தனர்.

பின்னர், டெங்கு காய்ச்சலை தடுக்க எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

முன்னதாக, டெங்கு காய்ச்சல் பரவி வரும் வேலையில் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போரட்டம், ஏழை மக்களை பாதிக்கச் செய்யும் என்பதால், வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக் கோரி கூடுதல் மனுவையும் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் தாக்கல் செய்திருந்தார்.

அப்போது அந்த மனு குறித்து பேசிய நீதிபதி, கடவுளுக்கு அடுத்தபடியாக கருதப்படும் மருத்துவர்கள், எப்படி ஏழை மக்களுக்கு சிகிச்சை வழங்க முடியாது என மறுக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.