Tamilnadu

“அ.தி.மு.க அரசின் இந்த துரோகச் செயலை பெண் சமுதாயம் மன்னிக்காது” - கே.எஸ்.அழகிரி பேட்டி!

சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :

“பொள்ளாச்சி பாலியல் வழக்கு இந்தியாவைப் புரட்டி போட்ட வழக்கு. ஏராளமான பெண்கள் சீரழிக்கப்பட்டனர். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் இருந்து விடுதலை செய்தது மாபெரும் குற்றம். மன்னிக்க முடியாத குற்றம்.

அரசின் இந்த எதிர்மறையான செயலை இந்திய மற்றும் தமிழக பெண் சமுதாயம் மன்னிக்காது. நிர்பயா வல்லுறவு வழக்கை விட பொள்ளாச்சி வழக்கு மிகவும் கொடூரமானது. முக்கிய தலைவர்களின் குடும்பம் இதில் சம்பந்தப்பட்டுள்ளது. இதில் அரசு கவனக்குறைவாக நடந்தது தவறு. குண்டர் சட்டத்தை ரத்து செய்தது தவறு.

புதிய கல்விக் கொள்கையானது தரம், தகுதி என்ற வார்த்தைகளை வைத்து நாட்டின் சமூகநீதியை சீரழித்து தொழிலாளிகளின் பிள்ளைகள் படிப்பதை வடிகட்டச் செய்கின்ற துரோகச் செயல். இந்த தகுதி, திறமை போன்ற வாதங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆரம்பநிலை கொள்கை.

வெளியில் இருந்து பார்த்தால் தகுதியும், திறமையும் இருந்தால் தவறா என்ற கேள்வி வரும். ஒரு கூலித் தொழிலாளியின் பிள்ளைக்கு 5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் பொதுத்தேர்வு நடத்தி, நீட் தேர்வு வைத்தால் மீண்டும் குலத் தொழிலைத் தான் செய்ய முடியும். கல்வியே பயில முடியாது.

காமராஜர், தந்தை பெரியார் ஆகியோர் போராடிய சமூக நீதியை குழி தோண்டிப் புதைக்கிற செயலாகும். ஆர்.எஸ்.எஸ். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அண்ணா, எம்.ஜி.ஆர்., பெயரை சொல்லும் அ.தி.மு.க கொடிய காரியத்தை செய்யக்கூடாது. செய்தால் எங்கள் உயிரைக் கொடுத்தாவது தடுப்போம்.

டாக்டர்கள் போராட்டம் நடத்தினாலும் மருத்துவமனைகளை செயல்பட வைத்தனர். எந்தக் கோரிக்கைகள் நியாயமானவையோ அவற்றைச் செய்ய வேண்டுமே தவிர மிரட்டக்கூடாது. ஜனநாயகத்தில் அனைவருக்கும் போராடுகின்ற உரிமை உள்ளது. அதை ஒடுக்க முயல்வது கண்டிக்கத்தக்கது.” எனத் தெரிவித்தார்.