Tamilnadu

தள்ளுவண்டியில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற சோகம்... வழியிலேயே இறந்ததால் குடும்பத்தினர் வேதனை!

தமிழக-புதுச்சேரி எல்லையான சுத்துக்கேணி கிராமத்தில் இயங்கி வரும் செங்கல் சூளையில் விழுப்புரத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பவுனு. கடந்த சில நாட்களாக சுப்பிரமணிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறது. இதனால் இவரை பார்ப்பதற்காக பவுனுவின் சகோதரி மல்லிகாவும் அவரது கணவரும் வந்துள்ளனர்.

இந்நிலையில், சுப்பிரமணியனுக்கு திடீரென உடல் நலம் மோசமடையவே, அருகிலிருக்கும் புதுச்சேரி காட்டேரிக்குப்பம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல முடிவெடுத்து இருக்கிறார்கள்.

செல்போன் வைத்திருக்காத, மல்லிகாவும் அவரது கணவரும், செங்கல் ஏற்றும் தள்ளுவண்டியில் சுப்பிரமணியனைப் படுக்கவைத்து, 4 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் காட்டேரிக்குப்பம் அரசு மருத்துவமனைக்கு தள்ளிக்கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சுப்பிரமணி இறந்துவிட்டதாக கூறினர்.

இதையடுத்து உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கேட்கப்பட்டது. தமிழக பகுதி என்பதால் ஆம்புலன்ஸ் வழங்க மருத்துவமனை தரப்பு மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர், இறந்தவரின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல, புதுவை காவல்துறையின் உதவியுடன் மாற்று ஏற்பாடு செய்து, சுப்பிரமணியின் உடலை உறவினர்கள் சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர்.

சுப்ரமணியை தள்ளுவண்டியில் வைத்து மல்லிகாவும் அவரது கணவரும் கொண்டு செல்லும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது.