Tamilnadu

ஆறாவது முறையாக நீட்டிக்கப்பட்டது கால அவகாசம்... இன்னும் வெளிச்சத்துக்கு வராத ஜெயலலிதா மரண ‘மர்மம்’!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு கொடுக்கப்பட்ட கால அவகாசம் அக்டோபர் மாதம் 24ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், மேலும், 4 மாதம் காலநீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் 2017ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி விசாரணை ஆணையம்  அமைக்கப்பட்டது. 3 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

அப்போது தொடங்கிய விசாரணை ஆறுமுகசாமி ஆணையத்தின் வேண்டுகோளின்படி 6 மாதமும், பின்னர் 4 மாதமும் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மூன்றாவது முறையாக 4 மாதம் கால நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்த கால அவகாசமும் முடிவடைந்ததைத் தொடர்ந்து நான்காவது முறையாக 4 மாதம் காலநீட்டிப்பு செய்யப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இறுதி நிலையை எட்டியிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இதற்கிடையே, அப்பல்லோ மருத்துவமனை, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்ததால் விசாரணை நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில் விசாரணைக்கு  கொடுக்கப்பட்ட கால அவகாசம் கடந்த ஜூன் 24ம் தேதி முடிவடைந்த நிலையில் 5வது முறையாக 4 மாத காலம் நீட்டிப்பு செய்யப்பட்டு இருந்தது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மேலும் 4 மாதங்கள் கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆணையம் அமைக்கப்பட்டு இதுவரை ஆறு முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. முழுமையாக இரண்டு ஆண்டுகள் கடந்தும் விசாரணையில் பெரிய முன்னேற்றம் இல்லாததால், கண் துடைப்புக்காகவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.