Tamilnadu
“எழுவர் விடுதலைக்கு தடையாக இருப்பது எடப்பாடி பழனிசாமியா?” - விளக்கம் கேட்கும் திருமாவளவன்!
7 பேர் விடுதலை தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்தாரா என்பது தொடர்பாக தமிழக முதல்வர் விளக்கம் அளிக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்கள் ஏழு பேரையும் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்துக்குத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாகவும் தனது எதிர்ப்பை அவர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கூறிவிட்டதாகவும் தி இந்து ஆங்கில நாளேட்டில் செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
7 பேர் விடுதலை தொடர்பாகத் தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் மீது ஓராண்டுக்கும் மேலாக தமிழக ஆளுநர் முடிவு எதையும் தெரிவிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்று ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அற்புதம் அம்மாள் அவர்களை டெல்லிக்கு அழைத்துச்சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் அதில் இல்லை. இந்நிலையில்தான் தமிழக ஆளுநர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதை அவர் ஏற்கனவே தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்து விட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. இது தமிழக மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆளுநர் தமிழக அமைச்சரவையின் முடிவை நிராகரித்தால் மீண்டும் அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பலாம். அவ்வாறு அனுப்பினால் ஆளுநர் அதை நிராகரிக்க முடியாது. இந்த சட்ட நிர்ப்பந்தம் இருப்பதால்தான் தமிழக ஆளுநர் அதில் முடிவெடுக்காமல் வைத்துள்ளார். ஆனால் தனது முடிவை அவர் தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்துவிட்டதாக இப்போது தெரியவந்துள்ளது. அவ்வாறு அவர் தெரிவித்திருந்தால் எழுத்துபூர்வமாக நிராகரித்து அனுப்பும்படி தமிழக அரசு வலியுறுத்தியிருக்க வேண்டும். அதைச் செய்யாததன் மூலம் ஆளும் அ.தி.மு.க அரசும் ஆளுநரும் சேர்ந்துகொண்டு தமிழர்களுக்கு எதிராக நாடகம் ஆடுவதாகவே நாம் எண்ணத் தோன்றுகிறது.
தமிழக ஆளுநர் தம்மிடம் கூறியது உண்மையா இல்லையா என்பதைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இது அவரது கடமையாகும். இல்லாவிட்டால் 7 பேர் விடுதலைக்கு தடையாக இருப்பது ஆளுநர் மட்டுமல்ல அ.தி.மு.க அரசும்தான் என்பதாகவே பொருள்படும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பின்னணி ?
-
விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் பலி:முதலமைச்சர் இரங்கல் -அரசின் உதவி விரைந்து வழங்கப்படும் எனவும் உறுதி!
-
ஆபாச வீடியோ சர்ச்சை : “பிரஜ்வலை இந்தியா அழைத்து வர வேண்டும்...” - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் !