Tamilnadu

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு விசாரணையில் நீதிமன்றம் அதிருப்தி : விசாரணை அதிகாரி மாற்றம்!

சென்னை, கோவை மாநகாரட்சிகளின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, நெருங்கியவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம், தி.மு.க எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் ஏற்கனவே நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி டெண்டர் முறைகேடு குறித்து அமைச்சர் வேலுமணிக்கு எதிராக தி.மு.க அளித்த புகாரில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த பொதுத்துறை முதன்மை செயலாளர் அனுமதியளித்துள்ளதாகவும், அதன்படி ஆரம்பகட்ட விசாரணை தொடங்கியுள்ளதாகவும் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் நிலை அறிக்கையை ஒரு மாதத்தில் தாக்கல் செய்ய கடந்த ஜனவரி மாதம் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அதிகாரியான லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி சங்கர் ஆஜராகி, முறைகேடு புகார் தொடர்பாக 349 உள்ளாட்சி டெண்டர்கள் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தி உள்ளதாகவும், 41 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், 117 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

முழுமையான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 3 வார காலம் அவகாசம் வழங்கவேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், உத்தரவு பிறப்பித்து ஓராண்டு காலம் ஆகியும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனத் தெரிவித்து, மேற்கொண்டு விசாரணையை லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி பொன்னி மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், இந்த விசாரணையை கண்காணித்து 2 வாரங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் இதுவரை பதிலளிக்காத அமைச்சர் வேலுமணி பதிலளிக்க 2 வாரம் கடைசி கெடு விதித்து விசாரணையை நவம்பர் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.