Tamilnadu

“தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு குறைவான போனஸ்?” - அ.தி.மு.க அரசுக்கு எதிராக போராட்டம்!

தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்ட கழகத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 8.45 சதவீத போனஸ் மட்டுமே வழங்கப்படும் என்ற் தமிழக அரசின் அறிவிப்பு தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தி.மு.க ஆட்சிக்காலத்தில் நீலகிரி மற்றும் வால்பாறையில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தை உருவாக்கி தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்க்கை மேம்பட அவர்களுக்கு அரசு குடியிருப்பு, மருத்துவமனை, பள்ளி போன்றவை அமைத்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டது.

அத்துடன் தீபாவளி பண்டிகையை அவர்கள் கொண்டாடும் வகையில் 20% போனஸ், பண்டிகைக்கு 25 நாட்களுக்கு முன்பே வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு எடப்பாடி பழனிசாமி அரசு தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கு 8.45% போனஸ் மட்டுமே வழங்கப்படுமென அறிவித்துள்ளது.

அ.தி.மு.க அரசின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று காலை வேலைக்குச் செல்லாமல் கூடலூர் சேரம்பாடி போன்ற பகுதிகளில் உள்ள அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உடனடியாக தமிழக அரசு 20% போனஸ் வழங்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இன்று காலை சேரம்பாடி அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட ஏராளமான தோட்டத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.