Tamilnadu

“கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க மத்திய அரசு தயங்குவது ஏன்?” - வைகோ கேள்வி!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் தொல்லியல் ஆய்வுகளைப் பார்வையிட ம.தி.மு.க பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ இன்று சென்றிருந்தார். அவருடன் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், மதுரை தி.மு.க எம்.எல்.ஏ பி.தியாகராஜன் ஆகியோர் சென்றிருந்தனர்.

இறுதிக் கட்டத்தை எட்டும் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “உத்தர பிரதேசத்தில் உள்ள சலோனியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெறும் கல்லறைகளும், சவக்கிடங்குகளும் மட்டுமே கிடைத்தன. அதன் ஆய்வு முடிவுகள் வருவதற்கு முன்பே அந்தப் பகுதியை பாதுகாக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

ஆனால், தமிழகத்தில் உள்ள கீழடியின் தொன்மை கி.மு 580 எனத் தெரியவந்தும் அதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவிக்காமல் தயக்கம் காட்டுவது ஏன்” என கேள்வி எழுப்பியுள்ளார் வைகோ.

தொடர்ந்து பேசிய அவர், “கீழடியில் அகழ்வாராய்ச்சி நடத்துவதற்காக அரும்பாடுபட்டவர் அமர்நாத் ராமகிருஷ்ணன். கற்காலத்தில் நெசவு போன்ற பல்வேறு தொழில்கள் நடைபெற்றதற்கான சான்றுகள் கண்டெடுக்கப்பட்ட பண்டைய பொருட்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஆகையால் கீழடியைச் சுற்றியுள்ள 110 ஏக்கர் நிலங்களிலும் அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். கீழடியைப் போன்று காவிரிப்பூம்பட்டினம், தாமிரபரணி, சிவகலை ஆகிய இடங்களிலும் அகழ்வாராய்ச்சி நடத்தப்படவேண்டும்” என வைகோ வலியுறுத்தினார்.

மேலும், தமிழரின் நாகரிகம் தான் உலகின் மூத்த மற்றும் முதல் நாகரிகம் என்பதை அமைச்சர் பாண்டியராஜன் விரைவில் ஒப்புக்கொள்வார் எனக் கூறியுள்ளார்.