Tamilnadu

“கல்லூரி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வெறும் நேர்முகத் தேர்வா?” - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

எழுத்துத் தேர்வு நடத்தாமல், அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பத் தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 2,300 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு வாரியம் அக்டோபர் 4ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.

அதில் அனுபவம், தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ரத்து செய்யக்கோரி, சென்னையைச் சேர்ந்த சுப்பிரமணியன், காஞ்சிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன், ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அந்த மனுவில், எழுத்துத் தேர்வு நடத்தாமல் நேர்முகத் தேர்வு அடிப்படையில் உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணை சட்டவிரோதமானது என்றும் அதை ரத்து செய்யவேண்டும் எனவும் கோரப்பட்டது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரன் வாதிடுகையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சுப்பிரமணியன், அரசுப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யவேண்டும் என்றும் உயர்நீதிமன்ற தோட்டப் பணிகளுக்கு கூட எழுத்து தேர்வின் மூலம் மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என தெரிவித்த மனுவுக்கு அக்டோபர் 15ம் தேதிக்குள் பதிலளிக்க உயர்கல்வித்துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குநர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.