Tamilnadu

மலேசியாவில் தமிழர்களின் பெருமையை நிலை நிறுத்திய சிறார்கள்: சிலம்பம் போட்டியில் 6 பதக்கங்கள் வென்று சாதனை!

உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் 2019 போட்டிகளை ஆசியா சிலம்பம் அகாடமி மற்றும் மலேசியா சிலம்பம் அகாடமி இணைந்து மலேசிய தலைநகர் கோலாம்பூரில் நடத்தியது.

இதில் மதுரையைச் சேர்ந்த ராசிகா உட்பட 6 மாணவர்கள் கலந்துக்கொண்டனர். அதில், 4 மாணவர்கள் தங்கப்பதக்கமும், 2 பேர் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.

இதில், நான்காம் வகுப்பு படித்துவரும் அதீஸ்ராம், 10 வயதிற்குட்பட்டோர் பிரிவில் இரட்டைக்கம்பு வீச்சில் தங்கப்பதக்கம் வென்றார். மாணவி ராசிகா மற்றும் மாணவர் கிஷோர் ஒற்றைக்கம்பு சிலம்பம் போட்டியில் தங்கம் வென்றுள்ளனர். அதேப்போல், காவ்யா என்ற மாணவி இரட்டைக் கம்பு சிலம்பம் சுற்றும் பிரிவில் தங்கம் வென்றார்.

அவரைத் தொடர்ந்து மாணவர் ராஜதுரை மற்றும் மாணவி காருண்யாதேவி சுருள்வாள் போட்டியில் தங்கம் வென்றனர். மேலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட பயிற்சியாளரும் கவுரவிக்கப்பட்டார்.

இந்த மாணவர்கள் இரட்டைக்கம்பு வீச்சு, ஸ்கேட்டிங் செய்துகொண்டே சிலம்பம் சுற்றுவது என சர்வதேச அரங்கை அசத்தியுள்ளனர். சிறுவயதிலேயே இதுபோன்ற சிறப்பான திறமைகளை கொண்டுள்ளதை, அரங்கில் உள்ள பார்வையாளர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

இந்த 6 மாணவர்களும் ஏழ்மைக் குடும்பத்தில் இருந்து சென்றவர்கள். தினமும் பள்ளி நேரம் போக மீதமுள்ள நேரங்களில் சிலம்பத்தின் மீது உள்ள ஆர்வத்தால் பெற்றோர்கள் சம்மதத்துடன் சிலம்ப பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர். தமிழனின் கலைகளை உலகுக்கு வெளிகாட்ட இதுபோல தொடர்ந்து பயிர்சிகளில் ஈடுபட உள்ளதாக இன்னும் உத்வேகத்துடன் தெரிவிக்கின்றனர் இந்த இளந்தமிழ் வீரர்கள்.