Tamilnadu

“ஊசலாடிக்கொண்டிருக்கும் ஊழல் அ.தி.மு.க அரசுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும்” : மு.க.ஸ்டாலின் சூளுரை!

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து பாளைய நொச்சிக்குப்பம், கிருஷ்ணாபுரம் பகுதிகளில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தொகுதி மக்களிடம் மு.க.ஸ்டாலின் குறைகளைக் கேட்டறிந்தார்.

பின்னர் அங்கிருந்த மக்கள் மத்தியில் பேசிய மு.க.ஸ்டாலின், “தமிழக விவசாயிகளுக்கு தி.மு.க ஆட்சியில் பல உதவிகளைச் செய்தது. குறிப்பாக விவசாயிகளுக்கு தி.மு.க இலவச மின்சாரம் வழங்கியது. விவசாயிகளின் 7 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது தி.மு.க ஆட்சி. ஆனால் இதுபோன்ற உதவிகளை அ.தி.மு.க அரசு செய்யத் தவறிவிட்டது.

அதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க ஆட்சியில் தமிழக விவசாயிகளின் தற்கொலை அதிகரித்ததுள்ளது. தி.மு.க ஆட்சியின் போது முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது.

ஆனால், அ.தி.மு.க அரசின் நிர்வாகக் கோளாறு காரணமாக, தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால் தி.மு.க வெற்றி பெறும் என்ற அச்சத்தில் தான் தேர்தல் நடத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது அ.தி.மு.க அரசு.” என்றார்.

மேலும் பேசிய அவர், “பெண்களின் முன்னேற்றத்திற்கு உழைத்தவர் தலைவர் கலைஞர். பெண்கள் சுயமரியாதையுடன் வாழவேண்டும் என்பதற்காகத் தான், மகளிர் சுய உதவிக் குழுவை ஏற்படுத்தினார். ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் முழுமையாகச் செயல்படவில்லை.

நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் மத்திய மாநில அரசுகளுக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கும் இந்த ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள, ஊழல் செய்து கொள்ளையடிப்பதை அ.தி.மு.க அரசு வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத ஆட்சியை அகற்ற தி.மு.க கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிக்கவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார் மு.க.ஸ்டாலின்.