Tamilnadu

18 மாதங்களில் 995 குழந்தைகள் இறப்பு : உண்மையை ஒப்புக் கொண்ட தஞ்சை அரசு மருத்துவமனை டீன்!

தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியதில், இந்த மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 995 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித் தகவல் வெளி வந்திருக்கிறது.

மக்கள் அந்த மருத்துவமனை செல்ல அச்சப்பட்டு வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. அதனடிப்படிடையில், இன்று தஞ்சையில் மருத்துவமனை முதல்வர் குமுதா லிங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பின் போது, “ தஞ்சை அரசு மருத்துவமனையில் 16,421 குழந்தைகள் கடந்த ஆண்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதில் 995 குழந்தைகள் இறந்ததாக கூறும் தகவல் உண்மை தான் இரண்டிலிருந்து மூன்று சதவிகிதம் குழந்தைகள் இறப்பதை தவிர்க்க முடியாது. “ என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், ”கர்ப்பத்திலேயே இறந்தது 322 குழந்தைகள், இதயம், மூளை உள்ளிட்ட குறைபாடுகள் உள்ள குழந்தைகள் 200,பிற இடங்களில் சிகிச்சைக்கு கொண்டு சென்று தாமதமாக தஞ்சை இராசா அரசு மருத்துவமனைக்கு வந்து உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 120, அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி இறந்த குழந்தைகள் எண்ணிக்கை 353” என 995 குழந்தைகளின் இறப்புக்கும் புள்ளி விபரம் தெரிவித்தார் மருத்துவமனை டீன்.

மேலும், “ 995 குழந்தைகள் இறந்ததால் மருத்துவமனை நிர்வாகம் சரியில்லை என்று யாரும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றார்.இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 3% நோயாளிகள் மட்டுமே உயிரிழந்திருப்பதாகவும், மருத்துவ துறையில் இது இயல்பான எண்ணிக்கை தான்.” என்று அவர் கூறிப்பிட்டுள்ளார்.

மேலும்,“தகவல் அறியும் சட்டத்தின் கீழ் உயிரிழப்பு குறித்த தகவலைப் பெற்றால், அதில் வெறும் எண்கள் மட்டுமே கிடைக்கும். அதன் மூலம் மருத்துவமனையின் தரத்தை தீர்மானிக்க முடியாது. இதுதொடர்பாக வெளியாகும் செய்திகளால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்” என்றும் குமுதா லிங்கராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி நாகை, திருவாரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.