Tamilnadu

ஷூட்டிங்கின் போது மாரடைப்பு: நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மறைவு!

தமிழ் திரைப்பட துறையில் தனக்கென தனியிடம் கொண்டவர் நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி. படபிடிப்பு ஒன்றுக்காக, குமுளி சென்றிருந்த இவருக்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மறைந்த கிருஷ்ணமூர்த்திக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர்.

அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் கிருஷ்ணமூர்த்தியை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

நான் கடவுள், தவசி, நான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். திருவண்ணாமலையை சேர்ந்த இவர் நடிப்பதற்காக 1983-ம் ஆண்டு சென்னை வந்தார். பின்னர் புரொடக்‌ஷன் மேனேஜராக வாய்ப்பு கிடைத்தது.

பல படங்களுக்கு புரொடக்‌ஷன் மேனேஜராக பணியாற்றினார். கூடவே, சின்ன வேடங்களில் நடித்தும் வந்தார். இயக்குநர் பாலாவின் ‘நான் கடவுள்’ உள்பட பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் கிருஷ்ணமூர்த்தி நடித்துள்ளார். இவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்டது.