Tamilnadu

திருச்சி நகைக்கடை கொள்ளை : பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனுக்கு தொடர்பு!? - போலிஸார் தேடுதல் வேட்டை!

திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கடைக்குள் புகுந்து கொள்ளையர்கள் தரைத் தளத்தில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. கொள்ளையர்களைப் பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், திருவாரூர் அருகே விளமல் பகுதியில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த கொள்ளையன் பிடிபட்டான். மற்றொருவன் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. 2 மூட்டைகளில், சுமார் 5 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டன. மூட்டைகளில் இருந்த நகைகள் லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்பது, 'பார் கோடு' மூலம் தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் எனத் தெரியவந்துள்ளது. தப்பியோடியவர் சீராதோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரியவந்துள்ளது.

அவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது இருவர் மட்டும்தானா, அல்லது வேறு நபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றது. தப்பியோடிய சுரேஷ், முருகன் என்பவரின் உறவினர் என்று தெரியவந்தது. இதையடுத்துத்தான் லலிதா ஜூவல்லரி கொள்ளையில் முருகனுக்கு தொடர்பு இருக்கலாம் என போலிஸார் சந்தேகித்தனர்.

திருச்சி நகைக்கடை கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருவாரூர் முருகன் மீது நான்கு மாநிலங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ள திருவாரூர் முருகன் கொள்ளை சம்பவங்களில் மூளையாகச் செயல்படுவது வழக்கம்.

கொள்ளைச் சம்பவம் குறித்த திட்டத்தை தனது கூட்டாளிகளை வைத்தே அரங்கேற்றி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார் முருகன்.

இந்த நிலையில் முருகன் தான் தனது சகாக்கள் மணிகண்டன், கோபால் ஆகியோர் உதவியுடன் திருச்சி லலிதா ஜூவல்லரியில் கொள்ளையை அரங்கேற்றியிருப்பதாக போலிஸார் தெரிவிக்கின்றனர். தற்போது திருவாரூர் முருகன் மற்றும் அவனது கூட்டாளிகளை தனிப்படை அமைத்து, காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.