Tamilnadu
“கார் டிரைவரை கொன்றது ஏன்?” - கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட 4 பேர் அதிர்ச்சி வாக்குமூலம்!
சென்னைஎம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் நாகநாதன். இவர் அசோக் நகரில் உள்ள சுந்தர் என்பவருக்கு சொந்தமான டிராவல்ஸ் நிறுவனத்தில், கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதி மதுரை மாவட்டம் மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் இறந்துகிடந்தார். இதனையடுத்து போலிஸார் மூன்று தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
இந்த விசாரணையில், கடந்த 6-ம் தேதி ஒரு பெண் உட்பட 4 பேர் குற்றாலத்திற்குச் செல்வதற்காக நாகநாதனின் இன்னோவா காரை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். சென்னையில் இருந்து காரில் சுற்றுலா சென்றதையடுத்து செப்டம்பர் 8-ம் தேதி இரவு நெல்லையில் இருப்பதாகவும் மறுநாள் காலை, சென்னை வந்து விடுவதாகவும், நாகநாதன் கார் உரிமையாளரிடம் கூறியுள்ளார்.
அதன்பிறகு நாகநாதனைத் தொடர்புகொள்ள முடியாததால், எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து கார் உரிமையாளர் சுந்தர் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனையடுத்து, போலிஸார் கார் செல்லும் ஊர்களில் உள்ள காவல்நிலையங்களுக்கு இதுகுறித்து தகவல் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், கொட்டாம்பட்டி அருகே நாகநாதன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் அவர் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து கார் கடத்தப்பட்டிருப்பதையும் போலிஸார் கண்டிபிடித்தனர். பின்னர் கடத்தப்பட்ட வாகனத்தை கோவையில் ஒருவர் பயன்படுத்தியதை போலிஸார் கண்டுபிடித்தனர்.
அதன்பிறகு போலிஸார் நடத்திய விசாரணையில், திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த ஜெயசுதா மற்றும் பெரோஸ் அகமது ஆகியோர் சேர்ந்து அந்த காரை விற்று பணம் பெற்றதாக கோவைச் சேர்ந்தவர் வாக்குமூலம் அளித்தார்.
மேலும் அவர் கொடுத்த தகவலின்படி, விராலிமலையைச் சேர்ந்த ஹரிஹரன் மற்றும் செங்கல்பட்டு ஜெகதீஷ் ஆகியோரை போலிஸார் கைது செய்தனர். பின்னர் அவர்களை போலிஸ் காவலில் வைத்து விசாரித்தனர். விசாரணையில், கார் கடத்தல் மற்றும் கொலை சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியாக ஜெயசுதா இருந்தது தெரியவந்துள்ளது.
மேலும் இதுபோல பல இடங்களில் கார்களை திருடி சுற்றுலா சென்று வந்துள்ளனர். அப்படி கார் திருடும்போது சாதாரண குடும்பத்துப் பெண் போல சுதா நடந்துக்கொள்வதாகவும், கார் ஓட்டுனர் இருக்கை அருகே அமர்ந்து ஓட்டுநருடன் சகஜமாக பேசுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அப்படி நன்றாகப் பழகிய பின்னர், காரை நிறுத்தி எதிரில் உள்ள கடைக்குச் செல்லுமாறு அனுப்பிவிட்டு காரை அங்கிருந்து கடத்திச்சென்று விடுவார்களாம். ஆனால், நாகநாதன் காரில் இருந்து இறங்கும்போதே காரின் சாவியையும் கையோடு எடுத்துச் சென்றுள்ளார்.
இதனால் காரை கடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்து, நாகநாதனைக் கொலை செய்ய முடிவெடுத்துள்ளனர். அதன்படி, கார் மதுரை அருகே சென்றுகொண்டிருக்கும் போது பின்னால் இருந்த மூன்று பேரும் கயிற்றால் அவரது கழுத்தை நெரித்துள்ளனர்.
பின்னர் காரை சாலையோரத்தில் நிறுத்தச் செய்து ஜெயசுதா உதவியுடன் மூன்று பேரும் நாகநாதனைக் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து சடலத்தை அப்பகுதியில் வீசிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
பின்னர் போலிஸார் ஜெயசுதா உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கொட்டாம்பட்டி காவல்நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”மின்னணு ஏற்றுமதியில் கொடி கட்டிப் பறக்கும் தமிழ்நாடு” : தினத் தந்தி நாளேடு பாராட்டு!
-
மே 7.. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று ஒலித்த குரலால் மின்னும் தமிழ்நாடு - வீடியோ வைரல்!
-
நீலகிரி வரையாடு பாதுகாப்பு: வரலாற்று சிறப்புமிக்க முன்னோடித் திட்டம் -முதலமைச்சருக்கு The Print பாராட்டு!
-
“துள்ளி எழுந்த பள்ளிக்கல்வித்துறை.. இதுதான் மிகப்பெரிய சாதனை” - முரசொலி தலையங்கம் பாராட்டு!
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!