Tamilnadu

திருச்சியில் கல்லூரி பேராசிரியை கடத்தல்... தலைமறைவான அ.தி.மு.க பிரமுகருக்கு வலைவீச்சு!

திருச்சி மலைக்கோட்டை நயினார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர் திருச்சியில் உள்ள இந்திரா காந்தி கல்லூரியில் ஆங்கிலதுறை பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.

இன்று காலை ஆண்டாள் வீதி பகுதியில் மகாலட்சுமி நடந்து சென்று கொண்டிருந்த போது ஆம்னி வேனில் காத்திருந்த நபர்கள் அவரைக் கடத்திச் சென்றனர். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அந்த வேன் வேகமாகச் சென்றுவிட்டது. இதனையடுத்து போலிஸார் உஷார்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

வணக்கம் சோமு

சுமார் 1 மணி நேரம் கழித்து பேராசிரியர் மகாலட்சுமியை கடத்தல் கும்பல் துவரங்குறிச்சி பகுதியில் இறக்கி விட்டுவிட்டதாக தகவல் வெளியானது. இன்ஸ்பெக்டர் சண்முகவேல் மற்றும் போலிஸார் மகாலட்சுமியை அழைத்து வந்தனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க வட்ட செயலாளர் வணக்கம் சோமு கடந்த சில மாதங்களாக மகாலட்சுமி செல்லும் இடங்களில் எல்லாம் தகராறு செய்து வந்ததாகவும் அவர் தான் இன்று கடத்தி சென்றதாகவும், விஷயம் பெரிதானதால் மகாலட்சுமியை விட்டுவிட்டுச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலிஸார் அ.தி.மு.க பிரமுகர் வணக்கம் சோமுவை தேடி வருகின்றனர்.