Tamilnadu

கணவனுக்குத் தெரியாமல் குழந்தையை ஒரு லட்ச ரூபாய்க்கு விற்ற மனைவி : வேலூரில் அதிர்ச்சி சம்பவம் !

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சத்யா. இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு முருகனுக்கும் சத்யாவிற்கும் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறந்த ஒரு வருடம் ஆன நிலையில் முருகனுக்கு காச நோய் வந்துள்ளது. அதனால் முருகன் சிகிச்சைக்காக தருமபுரி சென்றுள்ளார்.

சிகிச்சையின் போது அடிக்கடி வீட்டிற்கு வந்து குழந்தையை பார்த்துவிட்டுச் செல்வார். தொடர் சிகிச்சைக் காரணமான இரண்டு மாதங்களாக வீட்டிற்கு வராமல் தருமபுரியிலேயே தங்கியுள்ளார். அப்போது குழந்தைபற்றி போனில் கேட்டபோது மாற்றி மாற்றி பதில் சொல்லியுள்ளார் சத்யா.

இதனால், சந்தேகம் அடைந்த முருகன் வாணியம்பாடி வந்து பார்த்தபோது குழந்தையைக் காணாததால் அதிர்ச்சி அடைந்தார். மேலும் குழந்தை குறித்த தகவலை சத்யா சொல்லாததால் வாணியம்பாடி காவல் நிலையத்தில் மனைவி சத்யா மீது புகார் கொடுத்தார்.

இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் சத்யாவிடம் விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில் இடைத்தரகர் ஒருவர் மூலம் பெங்களூரைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும் அதற்கு, முன்பணமாக 65 ஆயிரம் ரூபாயை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சத்யா கொடுத்த தகவலின் அடிப்படையில், வாணியம்பாடி போலிஸார் பெங்களூரு சென்று குழந்தையை மீட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இடைத்தரகர் கவிதா, சத்யா மற்றும் அவரது பெரியம்மா கீதா ஆகிய மூன்று பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் இவர்கள் வேறு யாருக்காவது பணம் பெற்று குழந்தைகளை விற்றுக் கொடுத்துள்ளார்களா? என்கிற கோணத்தில் விசாரித்துவருகின்றனர். பெங்களூரு தம்பதியினருக்கு எச்சரிக்கை விடுத்த போலிஸார், குழந்தையை தந்தை முருகனிடம் ஒப்படைத்தனர். பணத்திற்காக பெற்ற குழந்தையையே தாய் விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.