Tamilnadu
மதுரை காமராஜர் பல்கலை தொலைதூர கல்வியில் கோடிக்கணக்கில் முறைகேடு.. போலியாக சான்றிதழ்கள்: 3 பேர் சஸ்பெண்ட்!
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் நிகழ்ந்த முறைகேடுகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி அக்பர் அலி குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ராஜராஜன் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்கத்தில் லஞ்சம் பெற்றுக் கொண்டு மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்த விவகாரம் தொடர்பாக மூன்று அதிகாரிகள் மீது விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு கடந்த ஜூலை மாதம் ஒப்புதல் வழங்கிய நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் விசாரணை நடைபெற்றது.
லஞ்ச ஒழிப்பு போலிஸார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககத்தில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றி விசாரணையைத் தீவிரப்படுத்தினர். பல மாணவர்கள் கல்விக் கட்டணம் கூட செலுத்தவில்லை. 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், அவர்கள் தேர்வு எழுதியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஒவ்வொரு மாணவருக்கும் முறைகேடாக போலியான சான்றிதழ்களை வழங்க தலா ரூபாய் 1 லட்சம் வரை பணம் கைமாறியதாகக் கண்டறியப்பட்டது.
கோடிக்கணக்கில் பணம் கைமாறிய விவகாரத்தில் முறைகேட்டுக்கு உடந்தையாக இருந்த நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, தொலைதூர கல்வி இயக்ககத்தின் கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், கணினி பிரிவு கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் கார்த்திகைச்செல்வன் ஆகிய மூன்று பேரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
கூடுதலாக சில முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதால் மீண்டும் விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டிருந்த நிலையில் நேற்று பல்கலைகழகத்தில் கூடிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன், கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, கணினி ஆபரேட்டர் கார்த்திகைச்செல்வன் ஆகியேரை பணியிடை நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து துணைவேந்தர் உத்தரவு பிறப்பித்தார்.
Also Read
-
மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க-விற்கு ஒரு MP சீட் ஒதுக்கீடு!
-
மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் “திறனகம்” : 5 முக்கிய அம்சங்கள் என்ன?
-
ஒன்றிய - மாநில உறவு : தமிழ்நாட்டின் குரலுக்கு ஆதரவு தந்த CM சித்தராமையா - நன்றி சொன்ன CM MK Stalin!
-
தென் இந்தியாவிலேயே முதன் முறை... சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உயர்திறன் மையம்!
-
இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு : துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!