Tamilnadu

முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் இதுவரை எத்தனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன? - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

தமிழக அரசால் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் எத்தனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019ம் ஆண்டுக்கான உலக முதலீட்டாளர்கள் மாநாடு, கடந்த ஜனவரி மாதம் இரண்டு நாட்கள் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் தனியார் நிறுவங்களின் விவரங்களை ஆராயும் வகையில் விதிகளை வகுக்கக்கோரி காஸ்கேட் என்ற நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

மேலும் 2015ல் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்குபெற்ற தனியார் நிறுவனங்களின் பின்னணியை ஆராயாததால், பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாகவும், அதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மனுவில் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் தொழில்களாக மாறி உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியது தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பதிலளிக்க கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தமிழகத்தில் எத்தனை நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்பது குறித்தும் அதன் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்தும் ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ஏற்கெனவே, முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அவ்வப்போது தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.