Tamilnadu

செல்போனை சார்ஜ் செய்தவாறு பயன்படுத்திய இளைஞர் பலி... கரூரில் பயங்கரம்!

ஒடிசா மாநிலம் கட்டாக் அருகில் உள்ள பதன்பூரை சேர்ந்தவர் பிரதாப் குமார் பாலே. இவர் கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் உள்ள செக்போஸ்ட் அருகிலுள்ள நகுல் சாமி என்பவரின் வீட்டில் தங்கி அருகிலுள்ள திண்டுக்கல் மாவட்டம் டி.கூடலூர் பகுதியில் செயல்படும் தனியார் ஸ்பின்னிங் மில்லில் கடந்த நான்கு மாதங்களாகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை தான் தங்கியிருந்த வீட்டை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பிரதாப் குமார் பாலே, தனது அலைபேசியை மின் சாதனத்தில் பொருத்தி சார்ஜ் ஏற்றியவாறு பேசுவதற்கு பயன்படுத்தியுள்ளார்.

அப்போது எதிர்பாராவிதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பிரதாப் குமார் பாலே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வெள்ளியணை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.