Tamilnadu

வேலையில் சேர்ந்த முதல் நாளே மாடியிலிருந்து விழுந்து பெண் உயிரிழப்பு - தற்கொலையா? விபத்தா?

திருச்சியைச் சேர்ந்தவர் டெனிதா ஜூலியஸ். 24 வயதாகும் இவருக்கு சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் ஐடி பார்க்கில் வேலை கிடைத்துள்ளது. இதனையடுத்து நேற்று பணியில் சேர்ந்தார்.

பின்னர் நேற்றிரவு பணி முடிந்த பிறகு அவர் நிறுவனத்தின் 8-வது மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். இதைப் பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் டெனிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே திருச்சியில் உள்ள டெனிதாவின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெனிதா நேற்றுத் தான் வேலையில் சேர்ந்ததால் அவரைப்பற்றி அலுவலகத்தில் உள்ள யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை. டெனிதா தற்கொலைதான் செய்து கொண்டாரா, அல்லது தவறி விழுந்தாரா எனத் தெரியவில்லை. அந்நேரத்தில் டெனிதா எட்டாவது மாடிக்கு ஏன் சென்றார் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே டெனிதாவின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து தெரியவரும் என காவல்துறையினர் கூறியுள்ளனர். வேலைக்குச் சேர்ந்த முதல்நாளே இளம்பெண் உயிரிழந்த சம்பவம் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.