Tamilnadu

“யாரை எங்க உட்கார வைக்கணுமோ, அங்கு உட்கார வைங்க”- நடிகர் விஜய் ‘பிகில்’ பேச்சு!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்றைய தினம் தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அதில் பிகில் படக்குழுவினர் பலர் கலந்துக்கொண்டனர்.

பின்னர் இதில் பங்கேற்று பேசிய நடிகர் விஜய், பேனர் விழுந்து சாலை விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது கோபப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோபப்படாமல், யார் யார் மீதோ பழிபோடுகிறார்கள். யாரை கைது செய்ய வேண்டுமோ அவர்களை விட்டுவிடுவதாகவும், பிரின்ட் செய்தவரையும் லாரி ஓட்டுநரையும் பிடிப்பதாகவும் விஜய் குற்றஞ்சாட்டினார்.

மேலும், பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு ஆறுதல் கூறிக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். சுபஸ்ரீ இறப்பு மற்றும் சமூக பிரச்னைகளை கவனம் செலுத்தி ஹேஷ்டேக் பயன்படுத்துங்கள். சமூக வலைதளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்ட விஜய் தனது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதலில் ஈடுபட வேண்டாம் என என அறிவுரை வழங்கினார்.

மேலும் என்னுடைய போஸ்டரை கிழித்தாலும் பரவாயில்லை, உடைத்தாலும் பரவாயில்லை. ஆனால், என் ரசிகன் மீது கை வைக்காதிங்க என்றார். அரசியலில் புகுந்து விளையாடுங்கள், ஆனால், விளையாட்டில் அரசியல் வேண்டாம் எனவும் விஜய் அறிவுறுத்தினார்.

மேலும், “யாரை எங்க உட்கார வைக்கணுமோ அவரை அங்க உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும். யாரை எங்க உட்கார வெக்கணும்னு திறமையை வைத்து முடிவு பண்ணுங்க” என்றும் கூறினார்.

எம்.ஜிஆர், கலைஞர் குறித்தும் பேசிய நடிகர் விஜய், “எம்.ஜி.ஆரிடம் கலைஞர் குறித்து ஒரு அமைச்சர் தவறாகப் பேசிவிட்டதால், அந்த அமைச்சரை எம்.ஜி.ஆர் காரில் இருந்து வெளியேற்றினார்” என்று குறிப்பிட்ட அவர், எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பெண்கள் வெற்றிபெறும் ஒரு படத்தில் வாழ்க்கையில் வெற்றி பெற்ற பெண் (நயன்தாரா) இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.