Tamilnadu

பெண்களுக்கான உதவி மையங்களை எப்போது அமைப்பீர்கள்? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

பாலியல் மற்றும் குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவி மையங்கள் அமைக்க தேவைப்படும் கால அவகாசம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டு புகார் அளிக்க வரும் பெண்களுக்கு கவுன்சிலிங் வழங்க காவல் நிலையங்களில் ஆலோசனை மையம் அமைக்கக் கோரியும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உத்தரவிடக் கோரியும் கிருஷ்ணபிரியா ஃபவுண்டேஷன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பாலியல் மற்றும் குடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவும் வகையிலும், அந்தப் புகார்களை விசாரிக்கும் வகையிலும் மாவட்டம் தோறும் உதவி மையங்களை விரைந்து அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன், என்.சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பெண்கள் உதவி மையங்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து பெண்கள் உதவி மையங்கள் அமைக்கும் பணிகள் குறித்தும், இதற்காகத் தேவைப்படும் கால அவகாசம் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை இரண்டு வாரகாலம் ஒத்திவைத்தனர்.