Tamilnadu

கிருஷ்ணனின் லீலைகளைப் பேசினால் கருத்துரிமையை பறிக்கும் மதவாத சக்திகள் : முத்தரசன் கண்டனம் !

இந்துக்கள் வழிபடும் கடவுளான கிருஷ்ணரை அவதூறாகப் பேசியது தொடர்பாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மீது நெல்லை மாநகரில் உள்ள காவல் நிலையத்தில் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் ஜனநாயக அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் கி.வீரமணி மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிடர் கழகம் பகுத்தறிவுப் பரப்புரை செய்து வருவதை அனைவரும் அறிவர். மூடப் பழக்க வழக்கங்கள் மண்டிக்கிடப்பதற்கு புராணக் கற்பனைக் கதைகளே காரணம் என்பதை அறிவியல் ஆதாரத்தோடு பரப்புரை செய்து வருகின்றனர்.

கிருஷ்ணனின் லீலைகள் குறித்து பல தகவல்கள் உள்ளன. அவர் வீடுவீடாக வெண்ணெய் திருடி தின்பார் என்றும், ஆறுகளில் குளிக்கச் செல்லும் இளம் பெண்களின் ஆடைகளை எடுத்துக் கொண்டு, அவர்களை கிண்டல் செய்து, ஏளனப்படுத்தி, ஆபாசமாக அவமதித்து, அதில் ஆனந்தம் கொள்வார் என்றும் பல கதைகள் உள்ளன.

இதுபோன்ற கற்பனைக் கதைகளை சிருங்காரரசம் சொட்ட, பக்தர்கள் பரப்புரை செய்யும் போது இளைய தலைமுறையினர் சீரழிந்து போகும் நிலை ஏற்படுகிறது. இதனை விமர்சன ரீதியாக எடுத்துக் கூற அரசியல் அமைப்பு சட்டம் பேச்சுரிமை வழங்கியுள்ளது.

இந்த விபரங்களை தச்சநல்லூர் காவல்துறை கருத்தில் எடுத்துக் கொள்ளாதது ஏன்? கருத்துரிமையை பறிக்கும் ஜனநாயக விரோத செயலுக்கு பகவான் கிருஷ்ணனை மதவாத சக்திகள் பயன்படுத்துவதை கி.வீரமணி மீதான வழக்கு வெளிப்படுத்துகிறது.

கருத்துரிமை பறிப்படுவதை ஜனநாயக சக்திகள் எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாடு அரசு, நெல்லை நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு உரிய விளக்கம் அளித்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.