Tamilnadu

மாமனாரைக் குத்திக் கொன்ற மருமகன்... குடும்பத் தகராறில் விபரீதம்!

குடும்பத்தகராறு காரணமாக மாமனாரை மருமகன் வெட்டிக்கொன்றதாக தகவல் வெளிவந்துள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் பேருந்து நிலையத்தில் 52 வயதான முதியவர் ஒருவர் பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த நபர் ஒருவர், திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த முதியவரை சரமாரியாக குத்தியுள்ளார்.

அலறல் சத்தத்துடன் சரிந்து விழுந்த அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கற்களை எடுத்து அந்த நபரின் மீது தாக்குதல் நடத்தி அவரை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் மேலூர் பகுதி காவல்நிலையத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.

பின்னர் குடிபோதையில் இருந்த நபரை கைது செய்த போலிஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

அதில், உயிரிழந்தவர் மேலூர் அலங்கம்பட்டியைச் சேர்ந்த தங்கையா என்பதும், அவரை கொலை செய்தவர் தங்கையாவின் மருமகன் நல்லமணி எனவும் தெரிய வந்துள்ளது. தங்கையாவின் மகளுக்கும் நல்லமணிக்கும் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். மேலும் இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் தொடர்ந்துள்ளனர். இந்த விவாகரத்து வழக்கில் விருப்பம் இல்லாமல் நல்லமணி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்து முடிவுக்கு தனது மாமனார் தங்கையா தான் காரணம் எனக் கருதி, நல்லமணி அவரை படுகொலை செய்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, போலிஸார் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.