Tamilnadu

10 மாணவர்களுக்கு கீழ் உள்ள பள்ளிகள் ஓராசிரியர் பள்ளியாக மாற்றம்: தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் இயங்கிவரும் 38 ஆயிரம் அரசு தொடக்க, நடுநிலை, உயர் நிலைப்பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்யும் பணிகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டது.

அதன்படி, 30 ஆண்டுகள் பணி மூப்பு உள்ளவர்கள், 100 கிமீ தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கும் பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றும் பணியை பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, ஒவ்வொரு ஒன்றியத்திலும் செயல்படும் 7 தொடக்கப்பள்ளிகளை மேல்நிலை பள்ளிகளுடன் இணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு இணைக்கப்படும் பள்ளிகளை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் கல்வித்துறையில் பல்வேறு உத்தரவுகளும், மாற்றங்களும் மேற்கொள்ளப்படுவதால் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

முன்னதாக தனியார் பள்ளி, கல்லூரிகள் போன்று அரசுப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர்கள் இனி பள்ளி முதல்வர் என்றே அழைக்கப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதனால் அரசுப் பள்ளிகள் தனியார் மயமாக்கப்படுவதற்கான சூசக வேலைகள் என பேசப்பட்டு வருகிறது.