Tamilnadu

அண்ணா பிறந்தநாளில் அரிய வாய்ப்பு-  உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 50 சதவீத விலையில் நூல்கள் விற்பனை! 

இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது பேரறிஞர் அண்ணா, தமிழுக்கென்று தனித்துச் செயல்படக் கூடியதும் தமிழாய்வுகளை உலகளாவிய நிலையில் எடுத்துச் செல்வதுமான ஆய்வு நிறுவனம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, தனிநாயகம் அடிகளின் பெருமுயற்சியால், 1970 ஆம் ஆண்டில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஏற்படுத்தப் பெற்றது.

தமிழ் இலக்கியங்களின் மேன்மையையும் சிறப்பையும் உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காக அரிய நூல்கள் பதிப்புப் பணிகளையும் மேற்கொண்டு பழந்தமிழ்ப் படைப்புகளை அழிந்து போகாமல் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் மீட்டெடுப்புச் செய்து வருகின்றது.

இதுவரை இந்நிறுவனத்தின் மூலம் 1700 அரிய நூல்களும் ஆய்வு நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு வித்திட்ட பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் செப்டம்பர் திங்கள் 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 50 விழுக்காடு வரை தள்ளுபடி விலையில் நூல் விற்பனை நடைபெற உள்ளது.

கல்லூரி மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகவலை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் தெரிவித்துள்ளார்.