Tamilnadu

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் அமைச்சர் ஜெயபால் : வழக்குப் பதிவு செய்த காவல்துறை!

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் மதன். அ.தி.மு.க நிர்வாகியான இவர் தற்போது மணல்மேடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனராக உள்ளார். இவர் மணல்மேடு பேரூராட்சி துணை தலைவராக இருந்த போது நடந்த உட்கட்சி தேர்தல் தொடர்பாக அப்போதைய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலுக்கும் மதனுக்கும் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று சீர்காழியில் நடைபெற்ற அ.தி.மு.க கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள மதன் வந்திருந்தார். அப்போது மண்டப வாயிலில் வழிமறித்து முன்னாள் அமைச்சர் ஜெயபால் மற்றும் முன்னாள் அ.தி.மு.க நகர செயலாளர் குடல் குமார் என்கிற வேணுகோபால் ஆகியோர் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறி மதன் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால் மற்றும் குடல் குமார் மீது சீர்காழி காவல் நிலையத்தில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த சீர்காழி போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் தன் கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்தாக வழக்கு பதிவு செய்த சம்பவம் சீர்காழி பகுதி அ.தி.மு.க.வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.