Tamilnadu

மாடி விட்டு மாடி தாண்டும்போது தவறி விழுந்து திருடன் பலி : கொள்ளையடிக்கச் சென்ற இடத்தில் சம்பவம்!

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள சித்தர்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டாண்டு மணி என்ற மணிகண்டன். இவன் மீது பல்வேறு திருட்டு மற்றும் வழிப்பறிக் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் மணிகண்டன் அப்பகுதி மாடி வீடுகளைக் குறிவைத்து திருடுவதை வழக்கமாக வைத்துள்ளான்.

சமீபத்தில் ஒரு திருட்டு சம்பவத்திற்காக போலிஸார் மணிகண்டனை தேடி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் காமராஜர் நகரில் உள்ள ஒரு கடைக்காரரின் வீட்டில் கொள்ளை அடிப்பதற்காக ராஜலட்சுமி என்பவரின் வீட்டு மொட்டை மாடியில் இருந்து அருகில் இருந்த மாடிக்கு தாவிக் குதித்துள்ளார்.

அப்போது 15 அடி உயரத்தில் இருந்து தடுமாறி கீழே விழுந்த மணிகண்டன், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சத்தம் கேட்டு ஓடிவந்த ராஜலட்சுமியின் குடும்பத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த மணிகண்டன் குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், மணிகண்டனின் உடலை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் விசாரணை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.