Tamilnadu

மெரினாவில் காதல் ஜோடியை மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற ‘போலி’ போலிஸ் கைது!

சென்னை திருவெற்றியூரைச் சேர்ந்தவர் கார்த்திக் (35). வாய் பேச முடியாத இவர், நுங்கம்பாக்கத்தில் உள்ள இருசக்கர வாகன சர்வீஸ் சென்டரில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு மெரினாவில் நேதாஜி சிலை பின்புறம் உள்ள மணற் பரப்பில் அமர்ந்து சைகை மூலம் தனது காதலியுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் தன்னை போலிஸ் என அடையாளப் படுத்திக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தர மறுத்த கார்த்திக்கை அந்த நபர் கன்னத்தில் அறைந்துள்ளார். மேலும், பணம் கொடுக்கவில்லை என்றால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்வேன் என்றும் மிரட்டியுள்ளார்.

உடனே, அவர்கள் கூச்சலிட அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு வந்து அந்த நபரைப் பிடித்து மெரினா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலிஸார் நடத்திய விசாரணையில் போலிஸாக நடித்த அந்த நபர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் எனத் தெரியவந்துள்ளது. அவரைக் கைது செய்து மெரினா போலிஸார் விசாரித்து வருகின்றனர்.