Tamilnadu

“காதலிக்கு செலவு செய்த பணத்தை மீட்டுக்கொடுங்க”... போலிஸை நாடிய காதலன் - சென்னையில் பரபரப்பு!

காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதாகக் கூறி, அவருக்குச் செலவு செய்த பணத்தை திருப்பி வாங்கித் தருமாறு இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் முறையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த விக்கி என்ற கீரிப்புள்ள மெக்கானிக்காக வேலைபார்த்து வருகிறார். இவர் நேற்று மதுரவாயல் காவல் நிலையத்திற்கு மதுபோதையில் வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

போலிஸாரிடம் முறையிட்ட அவர், தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அந்தப் பெண் திடீரென தன்னைக் காதலிக்க மறுப்பதாகவும் தெரிவித்துப் புலம்பியுள்ளார். அதைத்தொடர்ந்து, பிளேடால் வெட்டிக்கொண்டு பூந்தமல்லி நெடுஞ்சாலை நடுவே நின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றார்.

இதைத் தடுத்த போலீஸார் அவரிடம் விசாரித்துள்ளனர். அவர் தான் காதலித்த பெண்ணுக்கு 3,000 ரூபாய் செலவு செய்ததாகவும், அந்தத் தொகையை அவரிடமிருந்து வாங்கித்தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

பின்னர், போலிஸார் கேட்டுக்கொண்டதால் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார். காதலிக்குச் செலவு செய்த பணத்தை திரும்பக் கேட்ட காதலலின் இந்தச் செயல் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.