Tamilnadu

வெடிகுண்டு வீசி, தலையை வெட்டி சினிமா பாணியில் ரவுடி கொலை : புதுச்சேரி கோவில் திருவிழாவில் பயங்கரம்

புதுச்சேரி வாணரப்பேட்டை அப்துல் கலாம் நகர் பகுதியை சார்ந்தவர் ரவுடி சாணிக்குமார். இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன. ஆயுள் தண்டனை பெற்ற அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இதனிடையே நேற்று இரவு வாணரப்பேட்டை காளியம்மன் தோப்பு பகுதியில் உள்ள கோயில் திருவிழாவில் இரவு 11 மணியளவில் சாணிக்குமார் கலந்து கொண்டுள்ளார். அப்போது முகத்தை மூடி கொண்டு சென்ற ஒரு மர்ம கும்பல் விழா நடக்கும் இடத்தில் நாட்டு வெடிகுண்டு வீசியது.

இந்த சம்பவத்தில் அங்கிருந்த சிலர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் ரவுடி சாணிக்குமார் அந்த வெடிகுண்டில் இருந்து தப்பியோடிய நிலையில், காளியம்மன் கோவில் அருகிலிருந்து சற்று தூரத்தில் கத்தியால் வெட்டி, தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இந்த தகவலை அறிந்த போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தற்போது வரை இந்த கொலையைச் செய்த மர்மநபர்கள் யார் என்பது தெரியவில்லை. இதனை தொடர்ந்து கொலை செய்தவர்களைப் போலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.