Tamilnadu

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க சித்தாள் வேலை பார்க்கும் இளைஞருக்கு உதவிக்கரம் நீட்டிய தி.மு.க எம்.எல்.ஏ!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் கோவிந்தசாமி. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால் தனது படிப்பை 12ம் வகுப்போடு நிறுத்திக்கொண்டு கட்டட வேலைகளுக்குச் சென்று வருகிறார். வறுமையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாலும், உடற்பயிற்சியின் மீதும், பளு தூக்குதலின் மீதும் கோவிந்தசாமிக்கு இருந்த ஆர்வமும், ஆசையும் தீரவில்லை.

ஆகையால், முறையான பயிற்சிகள் ஏதும் செய்யாமல் சில போட்டிகளில் கலந்துகொண்டு தோல்விகளைச் சந்தித்த அவர், பின்னர் பயிற்சி மேற்கொண்டு, உதவும் கரங்கள் என்ற அமைப்பின் உதவியோடு தேசிய அளவிலான பளுத்தூக்கும் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

அதில், 3 தங்கம், 2 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என தான் வாங்கிய பல்வேறு பதக்கங்களையும், சான்றிதழ்கள், கோப்பைகளையும் கூட தனது வீட்டில் வைப்பதற்கு இடமில்லாமல் தவித்து வருகிறார் கோவிந்தசாமி.

இவ்வாறு இருக்கையில், கடந்த ஆண்டு ஸ்வீடனில் நடந்த பளு தூக்குதலுக்கான உலகக்கோப்பை போட்டியிலும், கடந்த மே மாதம் ஹாங்காங்கில் நடந்த ஆசிய பளுதூக்கும் போட்டியிலும் இந்தியா சார்பில் பங்கேற்க கோவிந்தசாமிக்கு வாய்ப்பு கிடைத்தும், வறுமையின் காரணமாக பங்கேற்க முடியாமல் போனது.

இந்நிலையில், 13வது காமன்வெல்த் போட்டி கனடா நாட்டில் நடைபெற உள்ளது. இதில் 66 கிலோ பளு தூக்கும் எடைப்பிரிவில் பங்கேற்க கோவிந்தசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக கனடா செல்ல 2.50 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்பதால் மாவட்ட நிர்வாகத்திடம் உதவி கேட்டு மனு அளித்துள்ளார்.

இதனையடுத்து, கோவிந்தசாமி தொடர்பாக தெரிய வந்ததும், அவரை நேரில் வரவழைத்து, காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்பதாக மன்னார்குடி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா உறுதியளித்துள்ளார்.

மேலும், அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தர அரசிடம் முறையிட்டு அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகவும் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வை பலரும் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.