Tamilnadu

போலிஸ் டிக்கெட் எடுக்க மறுத்ததால் வாக்குவாதம்... அரசுப் பேருந்து நடத்துநர் மாரடைப்பால் மரணம்!

கடலூர் அருகே காவலர் ஒருவர் பயணச்சீட்டு வாங்க மறுத்து பேருந்து நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, திடீரென நடத்துநர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் இருந்து கடலூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், திட்டக்குடியைச் சேர்ந்த பழனிவேல் என்ற காவலர் ஏறியுள்ளார்.

அவரிடம், பயணச்சீட்டு வாங்கும்படி நடத்துநர் கோபிநாத் கூறியதற்கு தான் போலிஸ் என்பதால் டிக்கெட் வாங்க முடியாது என பழனிவேல் கூறியுள்ளார். இதற்கு அடையாள அட்டையை காட்டும்படி கோபிநாத் கேட்டதற்கு அதனையும் காட்ட மறுத்துள்ளார் பழனிவேல்.

இதனையடுத்து, கோபிநாத்துக்கும், பழனிவேலுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மயங்கி விழுந்த நடத்துநர் கோபிநாத்தை அருகே இருந்தவர்கள் நெய்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு சோதித்துப் பார்த்ததில், முன்பே கோபிநாத் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனையடுத்து, மந்தாரக்குப்பம் காவல்நிலையத்திற்கு பொதுமக்கள் தகவலளித்ததும் காவலர் பழனிவேலை போலிஸார் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.