Tamilnadu

காணாமல் போன மனைவி; புகார் கொடுத்த கணவன் - கொலைக் குற்றவாளி யாரென்று கண்டு பிடித்த போலிஸ் அதிர்ச்சி!

பொள்ளாச்சி அருகில் உள்ள பொன்னாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். கூலித் தொழிலாளியான இவருக்கும் கவுசல்யா என்ற பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், கவுசல்யாவை காணவில்லை என அவரது கணவர் சக்திவேல் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் கடந்த 7ம் தேதி புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால், கவுசல்யா குறித்து காவல்துறைக்கு தகவல் ஏதும் கிடைக்கவில்லை. கவுசல்யாவிற்கும் அவரது கணவர் சக்திவேலுக்கும் இடையே நிறைய சண்டைகள் நடந்திருப்பது காவல்துறைக்கு தெரியவந்தது. இதனையடுத்து சக்திவேலிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் கவுசல்யாவை சக்திவேல் கொன்றது தெரியவந்தது.

''கவுசல்யா மீது நீண்ட நாட்களாகவே எனக்கு சந்தேகம் இருந்து வந்தது. இதனால் பலமுறை எங்களுக்குள் தகராறு ஏற்படும். கடந்த மாதம் 26ம் தேதி நடைபெற்ற வாக்குவாததம் முற்றி கைகலப்பு ஆனது. ஓட முயன்ற என் மனைவி மீது கல்லை வீசினேன்.

அது என் மனைவியின் தலையில் பட்டு கீழே விழுந்தார். கீழே விழுந்த அவளின் கழுத்தை நெரித்ததில் அவர் உயிரிழந்தார். விஷயம் வெளியில் தெரியக்கூடாது என்பதற்காக மனைவியின் உடலை மூட்டையாக கட்டி ஊருக்கு வெளியில் உள்ள கிணற்றில் வீசிவிட்டேன்'' என காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

சக்திவேல் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் பொள்ளாச்சி காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சக்திவேலை போலீஸார் கைது செய்தனர்.